
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து, சென்னை திரும்பிய எம்.ஜி.ஆர். விமானத்தில் இருந்து கீழே இறங்குகிறார். (இடது) எச்.வி.ஹண்டே (வலது).
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 1984-ம் ஆண்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அவருக்கு அமெரிக்காவின் ப்ரூக்ளி னில் உள்ள டவுன் ஸ்டேட் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செய்தவர் அன்றைய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே. 32 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆருக்கு நடந்தது என்ன என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்ட நினைவுகள்:
1984 அக்டோபர் 5-ம் தேதி நள்ளிரவில் எம்.ஜி.ஆருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவரது மனைவி ஜானகி, பாதுகாவலர் ஆறுமுகம் ஆகியோர் அவரை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர்.
அக்டோபர் 6-ம் தேதி நான், நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட சில அமைச் சர்கள் மருத்துவமனையில் எம்.ஜி.ஆரைப் பார்த்தோம். எங்களிடம் சகஜமாகப் பேசி னார். அப்போது சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வந்தது. சட்டப்பேரவையில் என்ன பேச வேண்டும் என்பது பற்றி எங்களுக்கு ஆலோசனைகளை வழங்கி னார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 13-ம் தேதி நள்ளிரவில் பக்கவாதம் ஏற்பட்டு அவர் நினைவிழந்தார். எம்.ஜி.ஆரின் உதவியாளர் மூர்த்தி எனக்கு தகவல் தெரிவிக்க, நள்ளிரவில் மருத்துவமனைக்கு விரைந்தேன்.
நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் ஜெகந்நாதனை வரவழைத்தேன். ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் மூளையில் ரத்தம் உறைந்திருப்பது கண்டறியப்பட்டது. இதில் உள்ள ஆபத்தை உணர்ந்து அமெரிக்காவில் இருந்து மருத்துவ நிபுணர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தோம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டபோது எம்.ஜி.ஆருக்கு ரத்தத்தில் யூரியாவின் அளவு 88 மி.கி. ஆகவும், கிரியாட்டின் 8.2 மி.கி. ஆகவும் இருந்தது. இதனால் அவருக்கு ‘பெரிடோனியல் டயாலிசிஸ்’ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் ஏற்பட்ட ரத்த இழப்பால் பக்கவாதம் ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் மருத்துவர்களிடம் ஏற்பட்டது. அதனால் பெரிடோனியல் டயாலிசிஸ் செய்வது நிறுத்தப்பட்டது.

கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஜப்பானில் இருந்து வந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் கானு மற்றும் டாக்டர் நகமோரா. உடன் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் எச்.வி.ஹண்டே, டாக்டர் பி.நரேந்திரன், டாக்டர் கே.ஜெகந்நாதன்.
17-ம் தேதி பிரதமர் இந்திரா காந்தி எம்.ஜி.ஆரை நேரில் பார்த்து நலம் விசா ரித்தார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட் டும் எம்.ஜி.ஆரின் உடல்நிலையில் முன் னேற்றம் ஏற்படாததால் எங்களுக்கு அச்சம் ஏற்பட்டது. எனவே ஜப்பானைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் கானுவை வரவழைத்தோம்.
அமெரிக்காவில் இருந்த அவரை சிங்கப்பூர் வழியாக சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்து சென்னைக்கு வரவழைத்தோம். இதற்கு இந்திரா காந்தியின் உத்தரவின்பேரில் அவரது தனிச்செயலாளர் பி.சி.அலெக்சாண்டர் உதவிகளை செய்தார். கிளிசரால் என்ற மருந்தை ஊசி மூலம் செலுத்தும் தொழில்நுட்பம் டாக்டர் கானுவிடம் இருந்தது. வரும்போதே 10 டியூப் கிளிசராலை அவர் கொண்டுவந்தார். அதன் மூலம் எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது.
அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக நவம்பர் 5-ம் தேதி அமெரிக்காவின் ப்ரூக்ளின் பகுதியில் உள்ள டவுன் ஸ்டேட் மருத்துவ மையத்துக்கு சிறப்பு விமானத்தில் எம்.ஜி.ஆர். அழைத்துச் செல்லப்பட்டார். நானும் உடன் சென்றேன். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் பக்கவாதம் குணமானது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு எம்.ஜி.ஆர். முழுமையாக குணமடைந்தார். 1985 பிப்ரவரி 4-ம் தேதி அவர் சென்னை திரும்பினார்.
இவ்வாறு டாக்டர் எச்.வி.ஹண்டே கூறினார்.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.